Monday, December 17, 2007

அழகிய ஓவியம்..!

இனியவள்

எனக்குள் நீ விதைத்த
நம்பிக்கை ஒளிக்கீற்று
விண்ணளவு வளர்கின்றது
கனவாக..!

வாழ்க்கை பற்றிய 
கனவுகள் வானவில்லென 
கோலமிட்டு மின்னலென 
பளிச்சிடுகின்றது..!

நீ புதைத்த 
சோகங்கள் எனக்குள் 
உறங்கி என்னில்
துளிர்த்த இன்பங்கள்
உனக்குள் துள்ளி 
விளையாடுகின்றது..!

உன்னோடு கரைந்த 
நிமிடங்கள் ஒவ்வொரு 
பூக்களென பூத்து
பூங்காவனமென பூத்துக்
குலுங்குகின்றது - இன்பங்கள் 
வண்ணத்துப் பூச்சியென
சிறகடித்துப் பறக்கின்றது..!

உன்னோடு கலந்து விட்ட 
வாழ்க்கையிது - இன்பங்கள் 
பகிர்ந்து துன்பங்கள் 
துடைத்து புன்னகைகள் 
பரிமாறிக் கொள்ளும்
அழகிய வாழ்க்கைப் 
பயணம்...!

இதயம் போடும் 
ஆனந்தக் கூச்சல் - கண்கள் 
போடும் சந்தோஷ கோலம்
வாய்கள் முணுமுணுக்கும் 
மெல்லிசை அனைத்தும் 
உன் (நம்) பெயரே..!

என் நினைவுகள் - உன்
நினைவோடு கலக்க
என் நிஜங்கள் - உன்
நிஜங்களைத் தேடித்தேடி 
அலைகின்றது..!

என்றாவது ஒருநாள் 
என் கண்கள் உனை
சந்திக்கும் நேரம் 
அழகிய ஓவியமென
எம் நினைவுகளை
பரிசளிப்பேன் - கவிதை
தொகுப்பாக..!

Sunday, December 16, 2007

உயிரின் தவிப்பு..!



வா என்கின்றாய்
வருகின்றேன்..,
போ என்கின்றாய்
போக மறுக்கின்றேன்..!

நிஜத்தைத் தீண்டாமல்
நிழல் கூட வாழ்ந்திடும்
கண்மணியே - உன்
நிழலைத் தீண்டாமல்
இந்த நிஜம் வாழ்ந்திடாது
என் கண்ணின் மணியே..!

உன் மனதின் நிலை
புரியாது தவிக்கின்றது
என் உயிரிங்கு - உன் 
துன்பம் துடைத்திட
துடிக்கிறது என் இதயம்..!

உன் உயிரின் துடிப்பு
என் உயிர் அறிந்தது - ஆனால்
என் இதயத்தின் தவிப்பு
நீ அறிய மாட்டாயா..!

உன்னைக் காணாது
தவித்திடும் என்
கண்களுக்கு நிலவென
ஓளி வீசிடு என் அன்பே..!

உன் புன்னகை 
தரிசிக்காது - என் 
இமைகள் மூட 
மறுக்கின்றது - உன் 
கலகலப் பேச்சுக் 
கேட்காது - என் 
செவிகள் இனிமையை
இழந்து தவிக்கின்றது..!

வந்து விடு என் அன்பே
என் அன்பில் உன் அன்பைக்
கலந்து என் உயிரின் 
தவிப்பை அடக்கிடு 
அன்பே உன் ஓரப்
பார்வையால்..!

என்றும் என் உயிரில் 
கலந்து - என் 
இதயத்தில் குடியிருப்பவனே
ஒருமுறையேனும் - உன்
தரிசனம் கிடைக்கதா
என ஏங்கும்
பேதையிவள்..!

Sunday, December 9, 2007

!! கல்லறையில் வாழ்கின்றது !!


நினைவுகளில் தீக்குளித்து
நிஜத்தினிலே உயிர்க்கின்றேன்
பீனிக்ஸ் பறவையென..!

சிலிர்த்த ஆசைகளைனைத்தும்
செல்லரித்துக் கிடக்கின்றன
இதயத்தினிலே..!

கண்களை கண்ணீர் வசீகரிக்க
இதயத்தை சோகங்கள்
அணைத்துக் 
கொண்டதே..!

உன்னிடம் சொல்லாமலே 
இன்றும் என்றும்
கல்லறையில் வாழும்
என் காதல்..!

Saturday, December 8, 2007

சாந்தி தருவாயா.....?



காதலனே என் காதலனே
மெழுகாய் நான் உருகி
நிலவென ஒளிர்கின்றேன்
உன் இருளுக்குள்..!

அன்பே என் அன்பே
காதல் நான் செய்கையில்
எனக்குள் உன்னை
உருமாற்றுகின்றேன் 
என் குழந்தையாய்..!

என் வெட்கத்தினால்
என் ஆசைகளனைத்தும்
ஒளிந்து கொள்கின்றன
என் கண்களுக்குள்ளே...!

அன்பே உன் புன்சிரிப்பில்
பூலோகம் சாய்ந்ததே
கண்ணே உன் கனியமுதில்
என் இளமை பொங்கியதே..!

உயிரே என் உயிரே
என் உயிரை வாங்கும்
என்னவே - என் 
நிழலென வரும் உன் 
நினைவுகளை யாசகமாய் 
வாங்கிச் செல்லடா
உன் நிழலில் இருந்து கசியும்
இனிமைகளால் என் 
இதயம் நிம்மதியின்றி 
தவிக்கின்றதே..!

என்னிலிருந்து உனைப் 
பிரித்து - என் 
இதயத்திற்கு சாந்தி தருவாயா
என் அன்பே..!

Friday, December 7, 2007

பொக்கிஷம்..!

இனியவள்

பாலைவன வாழ்க்கை
பூஞ்சோலையெனெ மணம்
வீசியது அன்பே 
உன் மீது கொண்ட
காதலினால்..!

தண்ணீரின்றி தத்தளித்த
ஓடமாய் கண்ணீரில்
தத்தளித்த என் இரவுகள்
பன்னீரில் குளிக்கிறது
உன் மீது கொண்ட
காதலினால்..!

விடியலின்றி தவித்திட்ட
வானிலே விடிவெள்ளியென
பறவையாய் பறந்து வந்து
உயிரோட்டமாய் என் 
இதயத்திலே தவழ்கின்றாய் 
அன்பே..!

என் சோகத்தை 
கவிதையாய் வடித்து
இருளை விரட்டும் 
ஓளியாய் - என் 
சோகத்தை கவிதை
வடிவில் விரட்டி
என் மகிழ்ச்சியே
இது தான் என
வாழ்கின்றேன் - என்
அன்பே..!

கிடைத்தற்கரிய 
பொக்கிஷம்
உன் காதலெனக்கு
ஆயுள்வரை காத்திடுவேன்
என் உயிர் கொண்டு..!

இயற்கையோடும் நீ..!!

இனியவள்

வெட்ட வெட்ட 
துளிர்க்கும் மரம் போல் 
துளிர்க்கின்றது
உன்னோடான 
காதல்..!

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் 
குளிர்கின்றது
உன் நினைவு..!

பூந்தோட்டத்தில் 
வண்ணமயமாய்
விரிந்திருக்கும் 
பூக்கள் போன்ற
உன் கண்கள்..!

சிணுங்கி விட்டுச் 
செல்லும் 
தென்றல் போல் 
உன் மூச்சுக் காற்று..!

இசைக்கேற்று 
அசைந்தாடும்
மரங்கள் போன்ற
உன் ராஜ நடை..!

காலை நேரச் சூரியனை
ஞாபகப் படுத்தும்
உன் அழகிய முகம்..!

நட்சத்திரங்கள் 
உயிர் பெற்று வந்ததோ 
பூமியில் என
அதிசயிக்க வைக்கும்
உன் புன்னகை..!

இறைவன் படைத்த 
அனைத்திலும்
நிழல்ஆடுகின்றது
உன் நினைவுகள்...!

Thursday, December 6, 2007

!! இனிய நினைவுகள் !!

இனியவள்

இதமான தென்றல் 
என் முகத்தில்
தவழ்த்து செல்கையில்
எனக்குள் ஊர்ந்து 
செல்கின்றது - உன் 
இனிய நினைவுகள்..!

அந்தி சாயும் வேளையில்
குழந்தையாக என் தோளில்
சாய்ந்திடும் உன் 
பொன் முகமதை
கண்டுவிட்டால் போதுமடா
என் கவலைகள்
மறைந்திடுமே..!

உன் செவ்விதழ் திறந்து
என் பெயர் சொல்லி 
அழைக்கையில் - என் 
இதயம் தவம் கிடக்கின்றது
உன் வார்த்தையை 
இசையென மாற்றிட..!

கனவில் என்னைக் 
கிச்சுக் கிச்சு மூட்டிடும் - உன் 
பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தால்
நாணிச் சிவந்த - என் 
கன்னத்தை இமைக்காமல் 
பார்த்து ரசிக்கும்
உன் கண்ணின் 
குறும்பு பிடிக்கும்..!

மழையென பொழிந்திடு..!



மேகமே..,
எனக்கென
ஓரு முறை
என் மீது மட்டும்
மழையென பொழிந்திடு..,
உன்னில் 
நனைந்து - என் 
சோகத்தை 
துடைத்துக் 
கொள்கின்றேன்...!

Wednesday, December 5, 2007

!! இருண்ட வாழ்வு !!

இனியவள்


மேகங்கள் ஒன்றுக்குள் 
ஓன்று மறைவது போல்
துன்பத்துக்குள் ஓளிந்து
கொள்கிறது இன்பம்..!

நீண்ட இரவுகள்
முடிவில்லா நினைவுகள்
விடிந்தும் விடியா கனவுகள்
தொலைதூர புன்னகை
இவையனைத்தும் எனது
அடையாளச் சின்னங்கள்..!

தீக்குச்சிப் பார்வையால் 
அன்று தெப்பமான 
என் மேனி தீயென 
எரிகின்றதே இன்று
தப்ப வழி ஏது
உன் கழுகுப் பார்வை
என்னைச் சுற்றி
வட்டமிடுவதனால்..!

இருண்ட வாழ்வுக்குள்
ஓளிவீசிய உன் அன்பு
இன்று இருளைக் கூட
காணமுடியாமல் 
கண்ணையும்
பறித்துச் சென்றுவிட்டது
என் அன்பே..!!

என்றென்றும் காத்திடுவேன்..!

இனியவள்

இனிமை எனை அணைக்க
தனிமை எனைக் கொல்ல
உள்ளத்தினிலே அலை மோதும்
காதல் வெள்ளத்தினிலே
கசப்புக்கள் அடித்துச் செல்ல
மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
என் இதயம் கண்ணீரிலே மூழ்க
என்னுயிர் தத்தெடுக்கின்றது
என்னவனை புத்தம் புது மலராய்..!

உன்மீது கொண்ட 
காதல் என்னுயிரிலே 
அனலைக் கக்க
தென்றலென வீசிடும்
காதல் - மேகமென
மழை பொழிந்திட
என் உள்ளம்
துன்பம் இன்பமெனும்
அலை கடலிலே
தத்தளிக்கின்றது..!

உன் உயிர் கொண்டு
காதலை உருக்கிடு
உன் இதயம் கொண்டு
அன்பை பூசித்திடு
என் காலமெல்லாம்
உன்னோடான காதல்
வாழட்டும் என்னுடன் - என
வாழ்த்திடுவேன் நான்
என்றென்றும்..!

நினைவிலும் கனவிலும்..!



தகமைகள் பார்த்து
வருவதில்லை அன்பு
மலர்களின் நிறங்களில் 
மனதை இழந்து வண்டுகள் 
பூவை நாடுவது போல்
உன் அன்பை என் உயிரால்
உணர்ந்து என்னை உனக்குள்
புதைக்கின்றேன் புதையலாய்..!

குழந்தையை உவகையோடு
அணைத்து முத்தமிடும் 
அன்னையாய் உன்னை 
அரவணைக்கின்றேன் 
நினைவிலும் கனவிலும்..!

கோடியாண்டுகள் செல்ல 
வைரமென ஜொலித்திடும் 
நட்சத்திரமாய் நிமிடங்கள் 
கரைய கரைய - என்
அன்பு மின்னுகின்றது
உயிராய் உன் உயிருக்குள்..!

உடைந்த கண்ணாடியாய்...!




ஒன்றாய் சேர்ந்து
சிரித்திடும் பொழுதினிலே
தெரியவில்லை வரும் காலம்
கண்ணீரில் கரைந்திடுமென..!

உன் வார்த்தைகள் 
ஓவ்வொன்றும் அழகிய 
பரிசுகளடா எனக்கு..,
பார்த்து பார்த்து 
ரசித்திடவல்ல
நினைத்து நினைத்து
தீயினில் எரிந்திட..!

அழகிய வாழ்க்கையென
நினைத்தேன் - ஆனால்
அலங்கோலமாகியது..,
கவலைகளற்ற வாழ்க்கை
இன்று உடைந்த 
கண்ணாடியாய்..!




ரசிக்க முடியவில்லை..!



பூக்கள் மேல் 
பன்னீர் தெளித்திடும்
மழைபோல்..,
வானத்தில் கோலம் 
போட்டுச் செல்லும் 
வானவில்லை போல்..,
கண்கள் ரசிக்க - உன்
விரல்கள் என் 
விரல்களோடு சில்மிஷம் 
செய்திட - நாணத்தில்
என் கால் கட்டைவிரல்
பூமியில் கோலமிடுவது போல் 
அன்று நான் கண்ட கனவு
அனைத்தும் இன்று 
என்னால் ரசிக்க
முடியவில்லை 
இதயத்திலே நீ
வலிகளின் ரேகைகளால்..!


Tuesday, December 4, 2007

அன்பு வெள்ளம்..!

இனியவள்

என் இதயத்தில் 
கரைபுரண்டு ஓடுகிறதே 
உன் அன்பு வெள்ளம்..
ஓருடலில் இரு உயிர் வாழும்
அதிசயமிது..!

உன்னைச் சந்திக்கும் போது
உணர்ந்ததில்லை இந்த
பாசப் பிணணப்பை
உணர்ந்த பின்
பிரிக்க முடியவில்லை
உறவை..!

பெண்மையின் மென்மை 
கண்டேன் - உன்
அரவணைப்பில்
என் சோகம் தீர்க்கும்
அன்பான தோழி நீ
எனக்கு..!

மேகங்களுக்கிடையிலே 
வெண்தாமரை நடுவினிலே 
மின்னலென பளிச்சிடும்
உன் புன்னகையிலே 
என் புன்னகை கண்டு
சிலிர்த்த என் உள்ளமெங்கும் 
பொங்கி வழிகிறது 
உன் அன்பு..!

Monday, December 3, 2007

!! உயிர் நாடியாய் !!

இனியவள்


காற்றில் பறக்கும்
காற்றாடியாய் 
பறக்கின்றது - உன் 
நினைவுகள்
என் மனதினிலே..!

வயலில் பூத்துக் குலுங்கும்
நெல் மணிகளாய் - உன்
புன்னகைத் துளிகள்..!

வயலின் இசை கேட்க
துடித்த காதுகள் - இன்று
உன் குரல் கேட்க
துடிக்கின்றன..!

மெளனம் கலையா இரவுகளை
உன் நினைவுகள் துயில்
எழுப்புகின்றன..!

வானத்தில் ஜொலிக்கும்
நட்சத்திரங்களுக்கு இடையில்
பன்னீர் சிந்தும் மழைத்துளியாய்
என் கண்ணீர்த் துளிகள்..!

உனைப் பார்த்த போது
தெரியவில்லை - பல 
இரவுகள் விடியா இரவுகளாய் 
மலரும் - உன் 
நினைவுகளிலேயென..!

விடியலை எதிர் நோக்கும்
சூரியன் போல 
இரவுகளை எதிர் நோக்குகின்றேன்
கனவு எனும் உலகத்தில் - என்
உயிர் நாடியாய் 
உன்னை சுவாசிக்க..!

காத்திருக்கின்றேன்..!

இனியவள்

இயற்கை அனைத்தும் 
மண்டியிடுகின்றது - உன்
அன்பின்பால் ஈர்க்கப்பட்டு..
என்பால் எப்பொழுது 
ஈர்க்கப்படுவாய்
இரும்பைக் கவரும் 
காந்தமாய்...!

அன்பே உன் இதயம் 
இரும்பல்லவே - உணர்ச்சிகள் 
கொண்டு செதுக்கப்பட்ட
அழகிய சிற்பம் அல்லவா..!

உணர்ச்சிகளுக்கு வேலிகள்
போட்டென்னை - சோகம் 
என்னும் நரகத்தில் 
தள்ளிவிடாதே..!

கண்ணை மூடி 
பால் குடிக்க நினைக்காதே
பூனைபோல் ஏமாறுவது 
நீ அல்ல நானே...!

வேலி என்னும் 
ஆடை பூண்டு
கருமேகமாய் 
காட்சியளிக்கின்றாய்
மழை என்னும் 
அன்பு பொழிந்து
எப்பொழுது 
வெண்மேகம் ஆவாய்..!

காத்திருக்கின்றேன் 
உனக்குள் பிறக்கபோகும் 
காதல் என்னும்
குழந்தைக்கு 
தாயாய் ஆவதற்கு...!

!! பேசும் விழிகள் !!

இனியவள்

உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளனங்கள் வார்த்தையாக
உருப்பெற உன்மேல்
உருவான காதல் 
உயிரோடு இரண்டறக் 
கலந்தன...!

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா
என காதுகள் தவம் இருக்க
நம் விழிகள் ஆயிரமாயிரம் 
வார்த்தைகள் பரிமாறிக் 
கொண்டன...!

நினைவு எனும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் 
கொண்டிருந்தன - இதயத்தின் 
துணையுடன்...!

என் உயிர் அவனோடு 
சங்கமிக்க அவன் உயிர் 
என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் 
மாற்றிக் கொண்டோம்
கனவினில்..!

Saturday, December 1, 2007

நினைவுகளே..!

இனியவள்
இரவின் நிழலில்
சிறு ஒளியின்
குடையின் கீழ்
பூ பூக்கும்
நினைவுகளே..!

ஆர்ப்பாரிக்கும் 
அலைகளில் -அள்ளித் 
தெளிக்கும் 
நீர்க்குமிழிகள் போல்
வந்து வந்து செல்லும்
நினைவலைகளே..!

விட்டில் பூச்சியென
நினைவுத் தீயினிலே
என் கனவுகளை 
எரித்து சாம்பலென 
கரைக்கின்றேன்
கண்ணீரிலே..!

Thursday, November 29, 2007

உன் அழகிய முகம்..!

இனியவள்

தனிமையை போக்க
நிலவை ரசிக்க பார்த்தேன்
அங்கே கண்டது
உன் அழகிய முகம்..!

அதைக் கண்டு
என்னுயிர் துடிக்க - உன்
நினைவே மறுபடியும்
என் இதயத்தை
ஆட்கொண்டது
உன் வதனம்..!

உயிர் துடிக்கின்றது - அன்பே 
நான் உனை நினைப்பது
போன்று நீயும் எனை
நினைப்பாயோ 
தெரியவில்லை 
ஒரு நொடி கூடவா என்
பெயர் கூட உன் ஜாபகம்
வரவில்லை அன்பே..!

கரைத்திட மாட்டாயோ..!

இனியவள்

பூக்கள் தாங்கும்
மழைத்துளியாய்
சோகம் தாங்கிடும் 
மனமே..!

கண்ணீர்த் துளியாய்
கரைத்திட மாட்டாயோ
என் சோகங்களை..!

Wednesday, November 28, 2007

அக்னித் துளிகள்..!!

இனியவள்

நினைக்க நினைக்க
இனித்திடும் கனியல்ல
நினைக்க நினைக்க
கசந்திடும் காதல்
எனது..!

தித்திக்க தித்திக்க
இசைத்திடும் 
இசையல்ல - உன் 
பேச்சு..!

நீயே உலகம் என
நினைத்தேன் அன்பே
உயிரினில் தெளித்திடும்
அக்னித் துளிகள்
அவை..!

நினைவுகளின் நிழல்
எரிமலையென மாறிட
தீயில் விழுந்த மலராய்
கருகிறது என்
இதயமும் - நீ
ஒரு முறையேனும்
திரும்பி பார்க்கமாட்டாயா 
என் அன்பே..!

Tuesday, November 27, 2007

சொந்தமில்லை..!

இனியவள்

கண்ணீர் கூட
சொந்தமில்லை எனக்கு
உன் நினைவுகளைச்
சுமந்து வருவதனால்..!

நீ எனக்கே சொந்தமாவாய் 
என்னையே காதல் 
புரிவாய் - உன்
காதல் மொத்தமும்
எனக்கே என
பூரிப்புடன் இருந்தேன்
ஆனால் என் பெயர் கூட
உன் நினைவில் இல்லாமல்
எனை தவிக்க விட்டாயே
அன்பே..!

Sunday, November 25, 2007

தனிமை..!



உலகமே நீயென
இருந்த என்னை
உலகத்தை விட்டு 
தூரமாக்கி - என் 
கண்களில் கண்ணீரை 
நிரந்தரமாக்கி 
வாழ்வில் வெறுமையை
பரிசளித்து - உயிரை 
பறித்து உடலை 
மட்டும் தனியே 
தவிக்க விட்டு
சென்றது ஏனடா..!

இதற்கு பெயர் தான் காதலா..!



இரு மின்னல்களும்
ஒன்றையொன்று 
உரசும் போது ஏற்படும் 
ஒளி போன்று
அவன் கண்கள் 
என் கண்ணோடு
உரசும் போது 
என் இதயத்தில்
ஒளிக்கீற்று...!

இதயத் துடிப்பு 
முன்பைவிட
வேகமாக துடிக்கின்றதே..,
அவனின் அழகிய 
குறும்பை கடைக்கண் 
கொண்டு நோக்கையிலே
சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....!

கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்து 
கொண்டாயே..,
கரம் கொண்டு தடுத்திட
முயற்சித்தேன் 
காற்றாய் மாறி
விரல்களுக்கிடையில் 
தவழுகின்றாய்..!

காற்றுக்கள் அனைத்தும்
உன்  பெயரை 
சுமந்து வந்து
ரீங்காரம் 
இடுகின்றது - என் 
காதினிலே..!

கோயில் கற்பக்கிரகத்தில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்..,
பாதத்தை 
மெதுவாய்
அடிவைத்து 
நடக்கின்றேன்
தரையில் காணும் 
மணல் துகல்களில்
உன் முகம்..,
இதற்கு பெயர் தான் 
காதலோ..!

காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்..,
ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரையே 
வேதம் போல்
உச்சரிக்கும்
பேதையிவள்..!

Saturday, November 24, 2007

வலிக்குதடி..!


உன் கரத்தினிலே
நான் கண்ட காயம்
என் உயிரினிலே
வலிக்குதடி..!

காதல் செய்
உண்மைக் காதல்
என்றோ ஒருநாள்
உனை தேடி வரும்
உன் காதல் ஒன்றும் 
பொய்யுமில்லை
அருகில் இருந்து
கண்கொண்டு பார்த்தவள்
நான்..!

உன் உண்மைக் காதல்
அவனுக்கோ ஒரு
விளையாட்டு பொம்மை
நீயோ தவிக்கின்றாய்
அவனோ சற்றுமே
உன் நினைவே 
இல்லாமல் இருக்கையில்
நீ மட்டும் ஏனடி
உனையே நீ
காயப்படுத்தினாய்
என் நெஞ்சம் 
வலிக்குதடி..!

கரத்தோடு கரம் சேர்த்து

இனியவள்

உன் கண்களின்
கண்ணீரைத் துடைத்திட
இங்கேயோர் கை
உண்டு பெண்ணே..!

கண்ணீரைக் கலைத்திடு
கார்மேகமாய் 
உனக்காய்
ஓர் கரம் - என்றும்
உன் கரத்தோடு 
கைகோர்த்து
உன் சோகங்களைத் 
தாங்கிடும்
வாழ்நாள் 
முழுவதும்...!

Friday, November 23, 2007

தியேட்டர் நினைவு

இனியவள்

நீண்ட நாட்களுக்கு பிறகு
குடும்பத்துடன் படம்
பார்க்கச் சென்றேன்
அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள்
என்னை......

நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை
ஒரு புறம் தள்ளிவிட்டு
உள் சென்று நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்......

திரையில் படம்
ஓடிக் கொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி
பார்த்துக் கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும்
அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய
நிகழ்வைக் கண்களில்
கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தேன்..!

உ(எ)ன் காதல்

இனியவள்

ரம்மியமான காலைப் பொழுதில்
நண்பர்கள் புடைசூழ ஜோதியாய்
சுடர்விட்டுக் கொண்டிருந்த
உன்னைக் கண்ட அவ்நொடி
என்னுள் பல கோடி
மின்சாரம் தாக்கிய ஓர் உணர்வு..!

நாமிருவரும் ஒரே வகுப்பில்
எதிரெதிரே அமர்ந்து
உன் கண்கள் என்னையும்
என் கண்கள் உன்னையும்
வட்டமிட அதனை கண்ணுற்ற
எம் நண்பர்கள் குறும்பினிலே
என்னில் அரும்பிய
வெட்கத்தைக் கண்ணுற்று
நீ கண் சிமிட்டிய நேரம்
என்னுள் பிறந்தது
உன்மேலான என் காதல்..!

தன்னந் தனியே
அந்தி மாலைப்பொழுதில்
கடவுளை தரிசித்து
ஆசிபெறச் சென்றவேளை
உன்னைக் கண்டு
என்னுள் ஓர்பூரிப்பு..!

நான் இவ்வூலகில்
அவதரித்த நாளன்று என்னுள்
அவதரித்த உன்னைக் கண்டதும்
உடலெங்கும் சந்தோஷ ரேகை
அரும்பியது என்னுள்...!

என் பிறந்த நாளுக்கு
வாழ்த்துச் சொல்வாய் என
காத்திருந்தேன்..!

காலங்கள் கரைந்தன
நாட்கள் நிமிடங்களாகவும்
மாதங்கள் நாட்களாகவும்
ஆண்டுகள் வாரங்களாகவும்
கரைந்தோடின எம்மிடையே...!

தேக்கி வைத்த அன்புகளை
இருவருக்கிடையே
இடம்மாற்றிக் கொண்டோம்
துன்பங்கள் எம்மைக் கண்டு
பயந்தோடின இன்பங்கள் எம்மை
அரவணைத்துக் கொண்டன
கனவினிலே...!

உறக்கத்தை வலிந்து
அழைத்துக் கொண்டேன் 
கனவில் நீ 
வருவாயென...!

நீ என்னருகில் இருக்கும் போது
இமைகள் இமைக்க மறந்தன
இமைகள் கூட தேவையில்லை
எனக்கு உன்னைப் பார்த்துக் கொண்டு
இருப்பதனாலே...!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு
மணித்துளியும் சொர்க்கத்தில்
இருப்பதைப் போல் உணர்ந்தேன்
சொர்க்கம் என்றால் இதுவா என்ற வினா
என்னுள் எப்பொழுதும்....!

சிரித்துக் கொண்டேயிருக்கும்
உன் கண்களைப் பார்ப்பதே
என் பொழுது போக்காய் ஆனது..!

தென்றல் வந்து இதமாய்
கலைத்து விட்டுச் செல்லும்
உன் கேசத்தை என் விரல் கொண்டு
சீராக்குவதில் எனக்கொர் தனி அலாதி 
நிழலினிலே...!

தென்றல் கலைக்கும் ஒவ்வோர்
விநாடிக்கும் தவம் இருக்க தொடங்கியது
என் இதயம்....!

உன் வாய்கள் உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
எனக்கு வேத வாக்காக
போடி என நீ செல்லமாய்
கோபித்துக் கொள்வதும்
போடா குரங்கு என
நான் பதிலுக்கு சிணுங்குவதும்
எமது அன்பின் 
உச்சக் கட்டமல்லவா
எல்லாமே கனவாக..!

என் உடம்பில் உள்ள
ஒவ்வொரு துளி இரத்தமும்
உன் நாமத்தையே மந்திரமாய்..!

உச்சரித்த படி என்னை
உயிர்ப்பித்துக் கொள்கின்றது..!

சூரியன் மேற்கு நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தான்
நீ என்னை நோக்கி
அடி மேல் அடி வைத்து
வந்து கொண்டிருந்தாய்
அந்த அடியே என் வாழ்வில்
பேரிடியாக வந்து விழும் என
அறியாமல் அணு அணுவாய்
ரசித்துக் கொண்டிருந்தேன்.

காரணம் அறிய என் உயிர் துடித்தது
அவன் மெளனம் என் உயிர் வாங்கியது
அன்றைய சந்திப்பே எமது இறுதி
சந்திப்பு என்று அறியாமல்....!!

மொழி பெயர்ப்பாயா....?



என் உயிர் வாங்கி
உன்னுயிரைத் 
தந்தவனே
என்னிதயம் வசித்திட
உன் இதயத்தைத் 
தருவாயா..?

என் கண்கள் கண்ட
உன் கண்களை
என் கனவுக்குள் 
புதைத்திடுவாயா...?

கற்பனைகள் பல
கொண்டு காவியமென
உன்னைப் படைத்திட
எனக்குள் மொழி 
பெயர்ப்பாயா
உன் மெளங்களை...?

இலக்கற்ற பயணம்...!



உயிர் கொண்டாடிய
உறவுகள் தூரமாகிட
போலிப் புன்னகை
இதழைத் தாங்கிட
இதயத்தை அழுத்திடும்
துன்பங்கள் தீயென
உயிரைப் பற்றிட
கால்களை கண்கள்
தொடர கண்களைத்
தொடர்ந்து செல்கிறது
மனமும் இலக்கற்ற
பயணத்தை நோக்கி....!


உன் தரிசனம்..!




பெண்களுடனேயே படித்து
அவர்களுடனேயே என் 
வாழ்க்கை நகர்ந்த 
வேளையில் - உன் 
தரிசனம் கிடைத்தது..! 

சிறு வயதில் பார்த்த உனை 
மீண்டும் உன் அருகே 
கொண்டு வந்து சேர்த்த 
கடவுள் - உன்மீது 
காதலை வரவைத்து 
கண்ணாமூச்சி விளையாடி 
இறுதியில் உன்னுடன் 
சேர விடாமல் செய்ய 
எதுக்காக உன் வீட்டருகே 
எனை கொண்டு வந்து 
சேர்த்தாரோ..!!

*** ஏது.. ஏது.. ஏது.. ***

இனியவள்

உயிர் மரணித்த பின்பு
உணர்வுகளேது...!

கண்கள் மரணித்த பின்பு
காட்சிகளேது....!

ராகங்கள் மரணித்த பின்பு
இன்னிசையேது....!

மொழிகள் மரணித்த பின்பு
வார்த்தைகளேது....!

அன்பு மரணித்த பின்பு
காதலேது....!

!! மனதை வருடும் இன்னிசை !!

இனியவள்

நேரத்தோடு போட்டி போட்டு
காற்றென பறக்கிறது 
மனது பட்டாம் 
பூச்சியாய்..!

சிறகடித்துப் பறந்திடும்
மனதிற்கு கடிவாளமிட
வந்தவனே..!

வர்ணங்களோடு சேர்த்து
என் கனவுகளையும்
களவாடிச் சென்றதும்
ஏனோ...!

கண்மூடினால் அணைத்திடும்
தூக்கத்தில் கூட 
அணையாத - உன் 
நினைவுகள் அழைத்துச் 
செல்கின்றதே என்னை
நினைவுலகத்திற்கு..!

பனிமூடிய முகில்களாய்
பாதை தெரியாத பூக்களாய்
வலிகளின் நிழலில்
என்னைத் துவாளமிட்டதும்
ஏனோ...!

கனவினில் உன் முகம்
மின்னலென பளிச்சிட
தூங்கிய நினைவுகள்
உரசிய தீக்குச்சியாய்
விழிப்பதுமேனோ..!

ரோஜாக்களை ரசித்திட்ட
இதயம் இன்று
முற்களைக் கூட
ரசிக்கின்றனவே..!

கல்லுக்குள் ஈரமாய்
உன்மேல் இன்னும்
காதல் கசிகின்றதே
உன் மனதில் 
வேறொருவர் இருப்பது 
தெரிந்தும் கூட..!

நினைவு வலிகளை
நீ பரிசளித்துச் 
சென்றாலும் வலிகளில் 
கூட கசிகின்றது
மனதை வருடும் 
உன் மேலான
காதல்...!

!! சுமை தாங்காது !!

இனியவள்

ஓவியம் வரைவது போல்
வரைந்து சென்றுவிட்டாய்
காதலை என் இதயத்தில்...!

வர்ணங்கள் பல சேர்த்திட்டேன்
என்னுயிர் கொண்டு - காகிதமென
கிழித்துச் சென்றுவிட்டாயே
கண்மூடி கண்திறப்பதற்கிடையில்...!

கண்ணாடியாய் உடைந்திட்ட
இதயத்தின் இரத்தத் துளிகளின்
சுமை தாங்காது துடிதுடித்துக்
கொண்டிருக்கிறதே 
என் உயிர்...!

Thursday, November 22, 2007

கண்ணீர்...!




பூக்கள் கொண்டு மாலைகள்
தொடுப்பது போல்
கண்ணீர் கொண்டு
மாலை தொடுத்திட
முனைகின்றது கண்கள்...!!!

Wednesday, November 21, 2007

ஓடோடி வந்திடு..!

இனியவள்

உயிரென நான் 
உனை நினைத்திருக்கையில்
தூசென மிதித்துச்
சென்றதுமேனோ...!

உயிர்ப் பூவென மாறி
என் பாதம் பணிகையில்
கல்லென தூக்கி
எறிந்ததுமேனோ..!

மேகமென கண்கள்
மழையென கண்ணீர்
பொழிகையில் 
சாக்கடையென - முகம் 
சுழித்ததுமேனோ..!

விஷக் கிருமியாய் 
இரத்தமெங்கும் ஓடுதே - உன் 
பிரிவெனும் உயிர்க் கொல்லி நோய்
அன்பெனும் தடுப்பூசி
போட்டென்னை காப்பாற்றிட
ஓடோடி வந்திடு..!

கண்ணை மறைத்திட்ட
காதல் கத்தியென மாறி
உயிரைப் பறித்திட
துடிக்கிறதே அன்பே..!

கண்கொண்டு பார்க்க மாட்டாயா..!

இனியவள்

என்னிதயம் துடிக்கிறதே
ஓடோடி வா அன்பே...,
காட்டாறாய் கண்களிரண்டும்
கண்ணீர் வடிக்கின்றதே
உன் அன்பெனும் 
அணைகொண்டு அணைக்க 
மாட்டாயோ..!

உயிருக்கு தீ மூட்டி
துடிக்கின்றேன் - நீராய்
அணைத்திட 
வாராயோ..!

நிலவு கூட சுடுகிறதே
பேதையிவள் 
முகத்தை பார்த்து
உன் பூமுகம் கொண்டு
நிலவை குளிர்விக்க
ஓடோடி வந்து விடு..!

இறைவனிடம் 
வேண்டிக் கொள்வதே
என் உயிர் காற்று - உன் மடியில் 
போவதற்கே..,
அதற்கேனும் ஒருமுறையாவது
எனைக் கண்கொண்டு
பார்க்க மாட்டாயா..!

கரைந்தோடுகின்றது..!

இனியவள்


வெண்ணிலவின் 
துணை கொண்டு
நகர்வலம் போகின்றது 
இருண்ட வானம் 
பூகோலமெங்கும்...!

நினைவின் 
துணைகொண்டு
கரந்தோடுகின்றது 
ருண்ட - என் 
வாழ்வும்..!

வெட்டவெளி 
வானமாய்
கண்களிரண்டில் 
காட்சிகளின்றி
கரைந்தோடுகின்றது 
கோலங்கள்
கண்ணீராய்..!

!! கனவே கலையாதே.. !!



கண்கள் உள்ள வரை 
காற்றாய் நினைவுகளை 
சுவாசிக்கும் வரை - இதயம் 
துடிக்கும் வரை 
கனவே நீ கலையாதே....! 

காதலில் ஊடல் உள்ள வரை 
மேகத்தோடு துள்ளி விளையாடும் 
தென்றல் உள்ளவரை
நிலவோடு சண்டையிடும்
கனவே நீ கலையாதே..!

வாழ்வில் ஜீவன் உள்ள வரை 
இன்பத்தில் துன்பம் 
ஈழையோடும் வரை 
இதயத்தில் இளமை 
ததும்பும் வரை
மழையோடு கைகோர்த்து - வானவில் 
கோலம் போடும் வரை
கனவே நீ கலையாதே..!

காற்றோடு கதை பேசும் 
பூக்கள் உள்ள வரை 
என்னவனின் நினைவை
சுவாசிக்கும் வரை
கனவே நீ கலையாதே..!

!! நிலவாய்... !!

இனியவள்

மின்னலடித்திடும் உன்
பார்வையில் மழையாய்
பொழிகிறதே அன்பு வெள்ளம்
என்னுள்...!

இடியென உரத்துச் 
சிரித்திடும் - உன் 
செல்லச் சிரிப்பில்
கனியென கனிந்திடுமே
என்னிதயம்..!

சூறாவளியாய் என் 
இதயத்தில் நுழைந்து 
வெளிச்சப் புள்ளியாய்
நட்சத்திரமென மின்னி
நிலவாய் குளிர்விக்கிறாய்
என்னை...!

** ஏனோ....!! **

இனியவள்

மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ...!

செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே
இருகரம் கோர்த்து 
நாம் நடக்கையில்
அலைகடல்கள் பின்னோக்கி
ஓடியதுமேனோ
கனவு தானே
என்று தானே..!

வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல் குட்டிகள் துள்ளி
ஓடுகையில் உன் 
கண்களிரண்டும் - என்
கண்களோடு சில்மிஷம்
செய்ததேனோ...!

உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக்காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம்
படபடத்ததுமேனோ..!

நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து
மெளன பாஷையில்
சஞ்சரிப்பதுமேனோ..!

என் விரலோடு உன் விரல்கள்
செல்லச் சண்டை பிடிக்கையில்
மேகங்கள் ஓன்றோடு ஒன்றுரசி
பன்னீர் தெளிப்பதுமேனோ..!

இது கனவு தான்
நிஞமல்ல - என 
நீயும் என்னை 
காயப்படுத்துகிறாயோ..!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.