Wednesday, October 3, 2012

பயணம் + வெற்றி



சிறகு விரித்த
பறவையாய் காற்றைக்
கிழித்துப் பறக்கிறது
என்னைத் தாங்கிய 
விமானம்...!

கலைந்தோடும் மேகங்கள்
ஒன்றோடு ஓன்று
உரசி விளையாடும்
விந்தை கண்டு
எனக்குள் ஓரு
பரவசம்..!

முதல் அனுபவம்
விண்ணைத் தொடும்
பரவசம் நாடி நரம்பெல்லாம்
பரவிடும் அதிசயம்..!

படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
என் இதயம் - புதிதாய் 
பிறந்த பரவசம்...!

உறவுகளைப் பிரிந்த
வலி என்னுள் பிறப்பெடுக்கும்
வேளையில் - சில பல
நினைவுகளில் விடுபட்ட
நிம்மதிப் பெருமூச்சு
என்னில்..!

மண்ணை விட்டு மண்
தாண்டிய தயக்கம் என்னில்
இல்லை சிறிதும்

அடிமைச் சிறகில் விடுபட்ட
பறவையாய் பறக்கத்
துடித்தது மனது
கட்டுப்பாடு என்னும்
விலங்கு உடைபட..!

பிறந்த மண் பாசமின்றி
புகுந்த மண் பற்றுமின்றி
என்னை அலைபாய வைத்திடும்
நினைவுகளை எனக்குள்
அடக்க முயற்சிக்கிறேன்
லட்சியமெனும் குறிக்கோள்
கொண்டு..!

சிதறிய சிந்தனைகள்
வட்டத்துக்குள் ஆட்பட
புதிய வாழ்க்கை புதிய
சிந்தனை ஆட்கொள்ள
விரைந்து ஓடும் நிமிடங்களின்
பின்னால்
நானும் விரைகிறேன் 
வெற்றியெனும் கோபுரத்தை
எட்டிப் பிடித்திட....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.