Friday, November 23, 2007

உ(எ)ன் காதல்

இனியவள்

ரம்மியமான காலைப் பொழுதில்
நண்பர்கள் புடைசூழ ஜோதியாய்
சுடர்விட்டுக் கொண்டிருந்த
உன்னைக் கண்ட அவ்நொடி
என்னுள் பல கோடி
மின்சாரம் தாக்கிய ஓர் உணர்வு..!

நாமிருவரும் ஒரே வகுப்பில்
எதிரெதிரே அமர்ந்து
உன் கண்கள் என்னையும்
என் கண்கள் உன்னையும்
வட்டமிட அதனை கண்ணுற்ற
எம் நண்பர்கள் குறும்பினிலே
என்னில் அரும்பிய
வெட்கத்தைக் கண்ணுற்று
நீ கண் சிமிட்டிய நேரம்
என்னுள் பிறந்தது
உன்மேலான என் காதல்..!

தன்னந் தனியே
அந்தி மாலைப்பொழுதில்
கடவுளை தரிசித்து
ஆசிபெறச் சென்றவேளை
உன்னைக் கண்டு
என்னுள் ஓர்பூரிப்பு..!

நான் இவ்வூலகில்
அவதரித்த நாளன்று என்னுள்
அவதரித்த உன்னைக் கண்டதும்
உடலெங்கும் சந்தோஷ ரேகை
அரும்பியது என்னுள்...!

என் பிறந்த நாளுக்கு
வாழ்த்துச் சொல்வாய் என
காத்திருந்தேன்..!

காலங்கள் கரைந்தன
நாட்கள் நிமிடங்களாகவும்
மாதங்கள் நாட்களாகவும்
ஆண்டுகள் வாரங்களாகவும்
கரைந்தோடின எம்மிடையே...!

தேக்கி வைத்த அன்புகளை
இருவருக்கிடையே
இடம்மாற்றிக் கொண்டோம்
துன்பங்கள் எம்மைக் கண்டு
பயந்தோடின இன்பங்கள் எம்மை
அரவணைத்துக் கொண்டன
கனவினிலே...!

உறக்கத்தை வலிந்து
அழைத்துக் கொண்டேன் 
கனவில் நீ 
வருவாயென...!

நீ என்னருகில் இருக்கும் போது
இமைகள் இமைக்க மறந்தன
இமைகள் கூட தேவையில்லை
எனக்கு உன்னைப் பார்த்துக் கொண்டு
இருப்பதனாலே...!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு
மணித்துளியும் சொர்க்கத்தில்
இருப்பதைப் போல் உணர்ந்தேன்
சொர்க்கம் என்றால் இதுவா என்ற வினா
என்னுள் எப்பொழுதும்....!

சிரித்துக் கொண்டேயிருக்கும்
உன் கண்களைப் பார்ப்பதே
என் பொழுது போக்காய் ஆனது..!

தென்றல் வந்து இதமாய்
கலைத்து விட்டுச் செல்லும்
உன் கேசத்தை என் விரல் கொண்டு
சீராக்குவதில் எனக்கொர் தனி அலாதி 
நிழலினிலே...!

தென்றல் கலைக்கும் ஒவ்வோர்
விநாடிக்கும் தவம் இருக்க தொடங்கியது
என் இதயம்....!

உன் வாய்கள் உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
எனக்கு வேத வாக்காக
போடி என நீ செல்லமாய்
கோபித்துக் கொள்வதும்
போடா குரங்கு என
நான் பதிலுக்கு சிணுங்குவதும்
எமது அன்பின் 
உச்சக் கட்டமல்லவா
எல்லாமே கனவாக..!

என் உடம்பில் உள்ள
ஒவ்வொரு துளி இரத்தமும்
உன் நாமத்தையே மந்திரமாய்..!

உச்சரித்த படி என்னை
உயிர்ப்பித்துக் கொள்கின்றது..!

சூரியன் மேற்கு நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தான்
நீ என்னை நோக்கி
அடி மேல் அடி வைத்து
வந்து கொண்டிருந்தாய்
அந்த அடியே என் வாழ்வில்
பேரிடியாக வந்து விழும் என
அறியாமல் அணு அணுவாய்
ரசித்துக் கொண்டிருந்தேன்.

காரணம் அறிய என் உயிர் துடித்தது
அவன் மெளனம் என் உயிர் வாங்கியது
அன்றைய சந்திப்பே எமது இறுதி
சந்திப்பு என்று அறியாமல்....!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.