Tuesday, November 20, 2007

!! கற் சிற்பம் !!



காயமாற்றிட உன்
அன்பை மருந்தாய்
மாற்றினேன் என்
உயிருக்கு - அதுவே
விஷமாய் என்னுயிரை
காற்றோடு காற்றாய்
மாற்றிச் சென்று விட்டதே..!

என் உயிர்க் காற்று
திசையறியாமல் உன்
மூச்சுக் காற்றை தேடி
தேடிப் பயணிக்கின்றது
துடுப்பிழந்த ஓடமாய்...!
வர்ணத்தில் கலந்திட்ட
நீராய் கலந்திட்டேன்
உன்னுள் நான்...!

இரும்பு கொண்டு
காந்தத்தை மணலில்
இருந்து பிரிப்பதைப்போல்
சுட்டெரிக்கும் உன்வார்த்தை
கொண்டென்னை 
பிரிக்க நினைக்காதே
திரிந்து போக
நானொன்றும்
கயிறல்லவே...!

நிஜத்தில் கூட
வலித்திருக்காதடா
நீ என்னை கனவில் 
திட்டுவது அவ்வளவு
வலிக்குதடா..!

கலைய கலைய 
சரி செய்யும்
மணல் சிற்பமல்ல
என் காதல்
உடைந்திட்டால் மீண்டும்
செதுக்க முடியா கற்சிற்பம்
உன்னோடான என் காதல்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.