Friday, November 23, 2007

!! மனதை வருடும் இன்னிசை !!

இனியவள்

நேரத்தோடு போட்டி போட்டு
காற்றென பறக்கிறது 
மனது பட்டாம் 
பூச்சியாய்..!

சிறகடித்துப் பறந்திடும்
மனதிற்கு கடிவாளமிட
வந்தவனே..!

வர்ணங்களோடு சேர்த்து
என் கனவுகளையும்
களவாடிச் சென்றதும்
ஏனோ...!

கண்மூடினால் அணைத்திடும்
தூக்கத்தில் கூட 
அணையாத - உன் 
நினைவுகள் அழைத்துச் 
செல்கின்றதே என்னை
நினைவுலகத்திற்கு..!

பனிமூடிய முகில்களாய்
பாதை தெரியாத பூக்களாய்
வலிகளின் நிழலில்
என்னைத் துவாளமிட்டதும்
ஏனோ...!

கனவினில் உன் முகம்
மின்னலென பளிச்சிட
தூங்கிய நினைவுகள்
உரசிய தீக்குச்சியாய்
விழிப்பதுமேனோ..!

ரோஜாக்களை ரசித்திட்ட
இதயம் இன்று
முற்களைக் கூட
ரசிக்கின்றனவே..!

கல்லுக்குள் ஈரமாய்
உன்மேல் இன்னும்
காதல் கசிகின்றதே
உன் மனதில் 
வேறொருவர் இருப்பது 
தெரிந்தும் கூட..!

நினைவு வலிகளை
நீ பரிசளித்துச் 
சென்றாலும் வலிகளில் 
கூட கசிகின்றது
மனதை வருடும் 
உன் மேலான
காதல்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.